– மனஹரன்
உன்னில்
என்னையே
நான் பார்க்கிறேன்
முதலில்
பனித்துளிகளில்
நனைவதாய்
கனகாம்பர
செவ்விதழ்களை
யாரோ
எம்மீது கொட்டுவதாய்
ஒருபிம்பம்
பிறகு ஒரு வெறுப்பு
என்னையே
எனக்குப் பிடிக்காத
நிலையில்
என்போல் இருக்கும்
உன்னை மட்டும்
எப்படி எனக்குப் பிடிக்கும்?
முகம்மட்டுமல்ல
என் முகவரியைக்கூட
பிறர் பயன்படுத்த
தடை விதித்தவன் நான்
நான் அணிந்திடும்
ஆடைகளை
எந்த ஒற்றனிடமிருந்து
கைப் பற்றினாய்?
நான் போட்டிருக்கும்
விழியாடியின் வடிவத்தை
எங்கிருந்து
நகல் எடுத்தாய்?
என் பற்களின்
வளி பயணிக்கும்
வழியை
எந்த பல் மருத்துவரிடம்
அளவு பெற்றாய்?
நான் முடிவாரும்
லாவகத்தை
எந்த வீடியோவில்
பார்த்து உணர்ந்தாய்?
நான் மீசையை
மளித்த விடயத்தை
மறு நொடி
உனக்கு
குறுஞ்செய்தி
அனுப்பிய கள்வன் யார்?
சரி
நான் எழுதும்
இந்தக் கவிதையை
நீயும்தான்
எழுதி இருப்பாய்?
நீ அனுப்பும் முன்னே
உன்னைக் கொன்று விடுகிறேன்
உடைந்த கண்ணாடியின்
ஒவ்வொரு துண்டிலும்
ஒரு நான்
இனி நான் என்ன செய்ய?
No comments:
Post a Comment